மார்க்கப்பற்றும் மறுமை வெற்றியும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
புகாரி 5090
மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்ய வேண்டும் என நபிகளார் கூறுவதோடு அவள் மூலம் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் இந்த செய்தியில் தெரிவிக்கின்றார்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு, கருத்து வேறுபாடுகளுக்கு மணப்பெண்ணை தேர்வு செய்வதில் உள்ள குளறுபடியே அடிப்படை காரணமாக திகழ்கின்றது. மேற்கண்ட புலம்பலுக்கும் தவிப்புக்குமான காரணம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்யாததே என்பதை திட்டவட்டமாக கூறலாம்.
நல்ல பெண்ணே சிறந்த செல்வம்
இஸ்லாம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மணந்து கொள்ள சொல்வதின் காரணம் ஒழுக்கமுள்ள பெண்ணுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கி அவளை கண்ணியம் செய்கிறது. உலகில் குவிந்து கிடக்கும் செல்வங்களில் நல்ல பெண்ணே சிறந்த செல்வம் என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
முஸ்லிம் (2911)
ஒரு மனிதன் உலகில் திரட்டும் பொக்கிஷங்களில் சிறந்த பொக்கிஷம், பொற்புதையல் நல்ல பெண்ணே.
ஒரு மனிதன் சேகரிப்பதில் மிகச் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? அவள் நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள். அவளை அவன் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமலிருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவர்களை) பாதுகாத்துக் கொள்வாள் என்று நபியவர்கள் உமரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் (1417)
நல்லொழுக்கமுள்ள பெண்ணிற்கு இவ்வுளவு உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்குவதாலே மணப்பெண்ணை தேர்வு செய்வதில் ஒழுக்கத்திற்கும், மார்க்கத்திற்கும் முதலிடம் ஒதுக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடுகிறது.
ஒருவர் மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதினால் அவரது வாழ்வில் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்கிறார். அவரது நிம்மதியான வாழ்விற்கு பல வகையில் ஒழுக்கமுள்ள பெண் அடித்தளமாக திகழ்கிறாள்.
குடும்ப நலனில் அக்கறை
நல்லொழுக்கமுள்ள பெண் தனது கணவனின் வீட்டாருக்கு, தான் ஆற்ற வேண்டிய கடமைகளை, பணிகளை அறிந்து, அது தொடர்பாக மார்க்கம் கூறும் பின்வரும் போதனையை எப்போதும் நினைவில் நிறுத்துக் கொள்கிறாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாüயாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), புகாரி 2554
என் கணவனின் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைப்பற்றி இறைவன் விசாரிப்பான் என்ற கடமையுணர்வு மார்க்கப்பற்றுள்ள பெண்ணிடத்திலேயே இருக்கும். ஆதலால் அவள் தனது கடமைகளை செம்மையாக நிறைவேற்றுவாள்.
குடும்பத்தில் செய்ய வேண்டிய இதர வேலைகளை மாமியார் (பிறர்) சொல்லி செய்யப்படும் நிலை இருக்காது. தானே மனமுவந்து குடும்ப வேலைகளை இழுத்து போட்டு செய்வதால் குடும்ப உறுப்பினர்களின் அன்புக்கு பாத்தியப்பட்டவளாக மாறிவிடுவாள்.
எனவே கணவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லும் நிகழ்வுகளுக்கு இடமில்லாது போவதால் கணவனின் உளரீதியான பல பிரச்சனைகளுக்கு இது முற்றுப்புள்ளியாக அமையும். இந்த ரீதியில் கணவனுக்கு பெருமளவு நிம்மதி ஏற்படும் என்பது உறுதி.
ஒழுக்க ரீதியாக…
நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்வதால் நமது குடும்பமும் ஒழுக்கமுள்ளவர்களாக, ஓரளவு மார்க்கப்பற்றுள்ளவர்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.
ஜாபிர் (ரலி அவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது தங்கள் சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களை பராமரிக்கும் பண்புள்ள, ஒழுக்கமுள்ள பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸிலிருந்து அறிகிறோம்.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) “நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள்.அதற்கு நான்,”வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், “கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள்…அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலüத்தேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (2967)
மார்க்கப்பற்றுள்ளவளை மனைவியாக தேர்வு செய்வதாலே நமது குடும்பம் சொர்க்கப்பாதையை நோக்கி பயணிக்கும் ஒரு வாய்ப்பு வாய்க்கும் என்பதை நினைவில் கொள்க.
குழந்தை வளர்ப்பில் அக்கறை
நல்லொழுக்கமுள்ள பெண் கணவனின் குடும்ப நலனில் பொறுப்போடு நடந்து கொள்வது போல் தங்களின் குழந்தை வளர்ப்பிலும் கடமையுணர்வோடு நடந்து கொள்வாள்.
ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
புகாரி (2554)
இன்று பலரும் தீயவர்களாக, இறைவனின் வெறுப்பிற்குரியவர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு முறையே.
குழந்தைகளை எப்போது கண்டிக்க வேண்டும்? எந்த இடத்தில் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இடம் பொருள் தெரியாமல் தங்கள் குழந்தைகள் தறுதலைகளாக மாறுவதற்கு ஒரு விதத்தில் பெற்றோர்களே காரணமாய் அமைந்து விடுகின்றார்கள்.
தீமையான காரியங்களில் ஈடுபட பணம் கேட்டாமல் மறுப்பேதுமின்றி வழங்குவது, தீய நண்பர்களோடு சகவாசம், தொழுகையை புறக்கணித்து உறக்கம், தொலைக்காட்சியில் மூழ்கி விடுதல் போன்ற காரியங்களில் குழந்தைகள் ஈடுபடும் போது தக்க அறிவுரைகளையும் கண்டிப்புகளையும் வழங்க பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள்.
இது போன்ற குறைகள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதால் வேறோடு பிடுங்கி, களையெடுக்கப்படும். அவளது அன்பு கலந்த கண்டிப்பினால் நமது குழந்தைகள் நல்லவர்களாக, ஒழுக்கசீலர்களாக மாறுவார்கள்.
கணவனுக்கு நல்ல துணையாக
யாருக்கேனும் சிரம் பணிய வேண்டும் என ஒருவருக்கு நான் கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு சிரம்பணிய வேண்டும் என பெண்ணுக்கு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதி 1079
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
, நூல் : புகாரி (3237)
குறிப்பாக நல்லொழுக்கமுள்ள பெண் இது போன்ற கணவனுக்கு கட்டுப்படுவதின் அவசியத்தை உணர்ந்து, அவனுக்கு செய்ய வேண்டிய கடமையறிந்து செயல்படுபவளாக இருப்பாள்.
கணவன் கவலையில் வாடும்போது ஆறுதல் கூறுபவளாக, வறுமையில் உழலும் போது இருப்பதைக் கொண்டு போதுமாக்கி கொள்ளும் தாராள மனப்பான்மையுடையவளாக, கணவனின் நெளிவு சுளிவுகளை அறிந்து நடப்பவளாக இருப்பாள். இப்படி நல்லொழுக்கமுள்ள பெண்ணிண் மூலம் ஒரு ஆண் அடையும் நன்மைகள் பற்பல.
ஒரு சில தம்பதிகள் சிறுசிறு விஷயங்களுக்காக எழுத சகிக்காத வார்த்தைகளால் சதா ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பார்கள். மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணமகளாக தேர்வு செய்வது இது போன்ற பலபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்கும். ஒருவரையொருவர் புரிந்து நடக்கும் சூழல் கனியும்.
இது போன்ற இன்னும் பல நன்மைகளை அனுபவித்தே உணரமுடியும். அவைகளை எழுத்தில் வடித்திட முடியாது.
ஆகவே திருமணத்திற்கு பிறகு நமது வாழ்க்கை இனிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது அழகு, குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒழுக்கம் மார்க்கப்பற்று ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதுவே நிம்மதியான, கட்டுப்பாடான வாழ்க்கைக்கு அச்சாரமாய் அமையும் என்பதை இறுதியாக நினைவூட்டிக் கொள்கிறேன்.
அப்துல் கரீம், துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
Comments
Post a Comment